Tuesday, October 30, 2012

*உத்திரகிரியை

Old H.M. Sri V. Somasundaram's rituals @ Srirangam will be conducted by his sons on the bank of Cauvery - Amma Mandabam, Srirangam on 02.11.2012, Friday.

Saturday, October 27, 2012

*1980-81 Batch Group Photo



sitting on the floor   :P.Ramasamy, J.Rathinam, R.Jeyaraj, S.Karthikeyan, G.Sampath kumar, M.Muthumaran, R.Viswanathan, N.Balasubramanian, M.Venkatesan T.Thirumalai                                      [L to R]   Parthasarathy
   
SITTING                  : S.Arumugam, K.S.Kesava Murthy, V.Santhanam, V.Somu, K.Thillai Govindan, Swami Dhuruvananda, Swami Chidbhavananda, Swami Nithyananda, S.Easwaran(H.M),  P.V.Paramasivam, S.Ilangovan, A.R.Masanam, P.Ramachandran, R.Balashanmugasundaram

Standing Row 1     : A.S.Azhagu sundaram, S.Siva kumar, R.Singaram, S.Paul levai, K.Parthasarathy, Jayapal, R.Ganesan, K.Shanmugam, P.Kumarasamy, N.Ramarathinam, N.S.V.Kumar, K.Senthil Kumar, M.Gunasekaran, P.Gopalakrishnan

Standing Row 2     : K.M.Rajendran, R.Durairaj, V.Matheswaran, K.Gopalakrishnan,  K.Gopikrishnan, A.L.Viswanathan, K.P.Jeyaraman, C.Suresh kumar, Sankar, G.Ravichandran, R.Somasundaram, K.Ganesh, R.P.Balakrishnan, P.Anandhakumar, K.Mohanraj, G.Lakshminarayanan, P.S.Sengottuvadivel, P.Thiyagarajan, R.Girish babu

Standing Row 3    :R.Ramesh babu, S.Balasubramaniam, S.Mukunthan, S.Chokkalingam, B.Kamalakannan, R.Chokkalingam, K.Radhakrishnan, D.Appavu, N.Chennakesavan, V.Adaikkappan, R.Neelakandan, R.Sundaramurthy, P.Murugesan, P.Sathasivam, R.Suresh Kumar, R.Ravichandran, S.Sowmiya Narayanan.

Standing Last row : M.Mahesh Mangalam, T.Prasath, M.R.Kumar, R.T.Palaniappan, S.M.Ramakrishnan, R.Palaniappan, G.Subbiah, T.M.Sivasethunarayanan. 


இங்கு 1980-81ஆம் ஆண்டு படித்த மாணவர்களின் Group Photo உள்ளது. பார்த்து மகிழுங்கள். 1985ஆம் ஆண்டிற்கு முன்பு பெரிய சாமியுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இருப்பின் இதே போல் பதிவேற்றலாம். புகைப்படங்களை அனுப்ப வேண்டிய முகவரி: rktoldboys@gmail.com

Tuesday, October 23, 2012

*சக்தி பூஜை



(“கடவுளின் வடிவங்கள்” புத்தகத்தில் அம்பிகை என்ற தலைப்பின் கீழ் சுவாமி சித்பவானந்தர் கூறியுள்ள கருத்துக்கள் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை முன்னிட்டு இங்கு பதிவேற்றப்பட்டுள்ளது.)
          
போஜனம் பண்ணுபவர்க்குப் பசிப்பிணி போம்; தேகம் திடம் பெறும். அவ்வாறே சக்திபூஜை பண்ணுபவருக்கு சக்தி வலுக்கும். காரியத்தைக் கொண்டு காரணத்தை நிர்ணயிக்கலாம். உலகத்தில் மேன்மையனைத்தும் பெற்று இன்புற்றிருப்பவர்களே சக்திமான்கள் ஆவர். முறையுடன் சக்தியைப் பயன்படுத்துதல் பூஜையின் முடிவான நோக்கம். இக்காலத்தவர்களுள் விசேஷமாக மேல்நாட்டவர் சக்தியின் ஜட சொரூபத்தைப் பெரிதும் போற்றுகின்றனர். நீராவி, மின்சாரம், ரேடியோ (தற்காலத்தில் கைப்பேசி மற்றும் கணினி)முதலியன ஜடசக்தியின் அம்சங்களாகின்றன. அவைகளின் தத்துவங்களை நன்கு அறிந்திருக்கும் பௌதிக சாஸ்திரிகள் அவைகளைக்கொண்டு நானாவித நன்மைகளை எய்துகின்றனர். யந்திரங்களின் வாயிலாக மனிதனுக்கு வேண்டிய சௌகரியங்களையெல்லாம் ஜடசக்தி செய்து வைக்கின்றது.
          
வெறும் வெளிச்சடங்கும் ஆடம்பரமும் பூஜையாய்விடாது என்பதை இக்காலத்திய இந்தியர்கள் தங்கள் வாழ்வின் மூலம் காட்டிவிட்டனர். பராசக்தியை அவர்கள் போற்றும் கோலத்தை நாடெங்கும் காணலாம். ஆனால் உலகில் உள்ள சமுதாயங்களில் இந்தியர்கள்தான் இப்போது சக்தியற்றவர்களாகக் கிடக்கின்றனர். பராதீனமும், தம் காரியத்தைத் தாமே நிர்வகித்துக்கொள்ள இயலாதிருப்பதும் சக்தி உடைத்திருப்பதற்கு அறிகுறிகளாகா. பூஜா விதியில் சடங்கு சரீரம் போன்றது; மனோபாவனை ஜீவன் போன்றது. பாவனையும் உணர்ச்சியும் அற்ற சடங்கு உயிரற்ற உடல் போன்றதாகும். இப்போது இந்தியர்களிடத்தில் உள்ள குறைபாடு இதுவேயாம். உயிர் மெலிந்து கிடக்க உடலை மட்டும் அவர்கள் அலங்கரித்து வருகின்றனர். சிலர் உடலாகிய சடங்கையும் அடியோடு ஒழித்துவிட வேண்டும் என்கின்றனர். ஆனால் அது முறையன்று. உடலின் வாயிலாக உயிர் மிளிரும்படி செய்ய வேண்டும். சடங்கின் மூலம் சக்தியின் கூறுபாடுகளாகிய தேக வலிவும் மனத்திட்பமும் பெறுதல் அவசியம். இதுவே சக்தி பூஜையின் அடிப்படையான நோக்கமாகும்.
          
மேல் நாட்டவர்போன்று இந்தியர் ஜடசக்தியை முழுதும் பயன்படுத்திக்கொள்ளக் கற்க வேண்டும். ஆனால் அது வெறும் சௌகரியத்தைக் கொடுக்குமேயொழிய நிலைத்த சுகத்தைக் கொடாது. மாறாத இன்பம் தூய வாழ்விலும், பரஸ்பர ஒற்றுமையிலும், பேரறிவிலும் பொருந்தியுள்ளது. பராசக்தி பூஜையில் தலையாயது பெண்ணுலகுக்குப் பெருமையளிப்பதாம். அவள் மாதர் வடிவத்தில் மேன்மையுற்று விளங்குகின்றன.
தக்ஷிணேச்வரம் பவதாரிணி 

या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता, नमः तस्यै नमः तस्यै नमो नमः
-      (தேவி மாஹாத்மியம்)
        “சர்வ பிராணிகளிடத்திலும் மாதாவாயிருக்கின்ற தேவிக்கு நமஸ்காரம்” என்னும் அரும்பெரும் பிரார்த்தனை பிறந்த நாடு இது. ஆனால் எந்த வீடு அல்லது நாட்டினுள் ஸ்திரீ ஜாதியாருக்கு இன்பமும் மேன்மையும் இல்லையோ அந்த வீடு அல்லது நாடு விருத்தியடையாது என்ற கோட்பாட்டை ஆதியில் அறிந்ததும் இந்நாடே. இந்திய மாதர் தாழ்மையுற ஆரம்பித்ததும் நாடும் தாழ்மையுறலாயிற்று. மேல்நாட்டில் மாதரது மகிழ்வும் சமுதாயத்தின் சௌபாக்கியமும் இணை பிரியாதிருப்பது கருதற்பாலது. ஆனால் அங்கு மாதருள் மனையாட்டி முதன்மை வகிக்கிறாள்; தேக சௌந்தரியத்துக்காக அவள் சிறப்பிக்கப்படுகிறாள். இந்தியாவின் லட்சியமோ அதைவிடப் பன்மடங்கு மேலானது. இங்கு மாதர் உலகில் தாய் தலைமை வகிக்கிறாள். அவள்மீது ஏற்றப்படும் சிறப்பு அனைத்தும் கற்புக்காகவேயொழிய உடல் அழகுக்காக அல்ல. இப்போது இந்நாட்டு ஸ்திரீகள் தேசீய லட்சியத்துக்கு ஏற்ப தெய்விகத்தோடு திகழும் மாண்பை எய்துதல் அவசியம். ஆதலால் நாம் செய்யும் சக்தி பூஜையில் மாதரைப் பராசக்தியின் வடிவங்களாகப் பாராட்டி அதற்கேற்ற சீரிய ஒழுக்கத்தைக் கடைபிடித்தல் வேண்டும்.
          
ஆயுதம் இல்லாதவன் அரைமனிதன் என்று சொல்லப்படுகின்றான். ஆயுதம் உடைத்திருப்பதும் அதை முறையே கையாளுதலும் ஆண்மைக்கு அறிகுறியாகும். ஆனால் இந்நாளில் நம் நாடு செய்கின்ற ஆயுத பூஜை பரிகாசத்திற்கு உரியதாகும். துருப்பிடித்துக் கிடக்கும் பழைய கருவிகளை வருஷமொருமுறை துலக்கிச் சந்தனம், புஷ்பம் சாத்தி அலங்கரித்து வைத்து அவைகளின் எதிரே விழுந்து நமஸ்கரித்துவிட்டு மறுபடியும் அவைகளைப் பத்திரப்படுத்தி வைத்துவிடுகின்றனர். இது சக்தி பூஜையின் பெயரால் தோன்றியுள்ள போலி உபாசனையாகும். சக்தியின் உதவியை உண்மையில் நாடுபவன் வல்லவனாகின்றான். அத்தகைய வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம். ஆதலால் வல்லவனாகி ஆயுதத்தை ஒழுங்காக உபயோகிப்பவனே ஆயுதபூஜை செய்பவனாகின்றான். அத்தகையவன் வருஷம் ஒருமுறை ஆயுதத்தை அலங்கரிப்பதில் அர்த்தமுண்டு.
          
சரஸ்வதி பூஜை பண்ணும் நம் நாட்டில்தான் அக்ஞான இருள் நிறைந்து கிடக்கின்றது என்று ஒருவர் பகர்ந்ததில் பொருள்மிக நிறைந்திருக்கிறது. ஏனென்றால் வைதீக விதிப்படி நம்மவர் கலைமகளை வணங்குகின்றாரல்லர். உணவு உடலுக்கு உறுதி தருவதுபோன்று சாஸ்திரங்களின் உட்பொருள் உள்ளத்துக்கு ஒளிவிளக்காக வேண்டும். அங்ஙனமின்றி அது புஸ்தகத்தில் அடங்கியிருப்பதோடு நின்றுவிடுகிறது. அதுதான் நம்மனோர் மாட்டுள்ள குறை. ஆதலால் தினந்தோறும் கல்வி பயிலுதல் கலைமகளுக்கு உகந்த பூஜையாகும்.
          
இகபரம் இரண்டிலும் மக்களுக்கு இன்றியமையாத புருஷார்த்தங்களைப் பராசக்தி பகுத்தருளிய வண்ணமாயிருக்கின்றாள். சுவாசிக்கும் காற்றுப் போன்று அவளுடைய காருண்ய வெள்ளம் தங்குதடையின்றிப் பொங்கிக்கொண்டிருக்கிறது. உலகனைத்தையும் ஈன்றெடுத்த அன்னை உலகுக்கு வேண்டிய யாவையும் பரிவுடன் வழங்கிடக் கைதூக்கிக் காத்திருக்கிறாள். அத்தகைய அகிலாண்ட நாயகியின் அனுக்கிரக்கத்தைப் பெறவல்ல அறிவையும் ஆற்றலையும் நம்மனோர் முறையே நாடுவார்களாக.

Friday, October 19, 2012

*Obituary


Our former Headmaster of SVVHS Sri V. Somasundaram passed away this morning(19.10.2012) @ Vayalur. Let His soul rest in peace in the lotus feet of Swami Chidbhavananda.

Tuesday, October 16, 2012

*அறிவிப்பு



நம்முடைய குருகுலத்தின் பழைய மாணவர்களின் சார்பாக, பூஜித்தற்குரிய நமது குலபதி தவத்திரு. சித்பவானந்த சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்று நிரந்தரக் கண்காட்சி ஒன்று தபோவனத்தில் வைக்கப்பட உள்ளது. ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தில் பெரிய சுவாமிகள் பயன்படுத்திய அறைகளில் இக்கண்காட்சி நிலையாக வைக்கப்படும். இதற்கு சுமார் ரூ.2 லட்சம் செலவாகலாம். பழைய மாணவர்களும், அன்பர்களும் இக்கைங்கர்யத்துக்காக மனமுவந்து நிதியளிக்குமாறு வேண்டுகிறோம். நமக்குக் கிடைத்துள்ள ஓர் அரிய வாய்ப்பு.

இக்கண்காட்சி அமைப்பதற்காக அடிப்படைப் பணிகள் மதுரை சித்பவானந்தர் சேவா சங்க அலுவலகமான ஸ்ரீ சாரதா சமிதியில் நடந்து வருகின்றன. இக்கண்காட்சி டிசம்பர் 28,29 மற்றும் 30 தேதிகளில் திருநெல்வேலி ஸ்ரீ சாரதா கல்லூரியில் நடைபெறவுள்ள R.V.S. பக்தர்கள் மாநாட்டில் வைக்கப்பட்டு அதன் பிறகு தபோவனத்தில் நிரந்தரமாக வைக்கப்படும்.

இதற்கு அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு 80-G வரிவிலக்கு உண்டு. ரசிதும் வழங்கப்படும். நிதி அனுப்புபவர்கள்
SRI RAMAKRISHNA TAPOVANAM
SRI SARADA SAMITHI, MADURAI
           
என்ற பெயருக்கு Demand Draft/Cheque ஏதேனும் ஒன்றை மதுரையில் மாற்றத்தக்கதாக எடுத்து கீழ்கண்ட முகவரிக்கு உங்கள் நன்கொடைகளை  அனுப்புங்கள். நேரிலும் செலுத்தலாம்.

முகவரி:
ஸ்ரீ சாரதா சமிதி,
1C, மடம் சந்து,
L N P அக்ரஹாரம்,
சிம்மக்கல்,
மதுரை - 625 001.
தொலைபேசி: 0452 - 2621360.
இப்படிக்கு,
ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவன பழைய மாணவர்கள் சங்கம்,
திருப்பராய்த்துறை.

Friday, October 12, 2012

*Sister Niveditha's Birthday Article



நிகரில்லா நிவேதிதாஇரு புத்தகங்கள்

ந்த பெண்மணி வெளிநாட்டு பெண்மணி. ஆனால் இந்த தேசத்துக்காகவே வாழ்ந்தார். இந்த நாட்டுக்காக இந்நாட்டு மக்களுக்காக அவர்களில் ஒருவராக வாழ்ந்து தன்னைத்தானே அணு அணுவாக அவர்களுக்காக சமர்ப்பித்தார். ஏழை எளிய மக்கள் வாழும் குப்பங்களில் சேரிகளில் இறங்கி சென்று வேலை செய்தார். சாதாரண காலங்களில் மட்டுமல்ல பெரிய நோய் அந்த மாநகரம் முழுவதும் பரவிக் கொண்டிருந்த காலத்தில். அவர் யார்?

இந்த கேள்வியை கேளுங்கள். எந்த இந்து குழந்தையும் உடனடியாக இதற்கு பதிலளிக்கும்: அன்னை தெரெசா!

ஆனால் தெரசா செய்தசேவையின் பின்னால் துல்லியமான பொருளாதார கணக்குகள் இருந்தன. மேற்கத்திய நாடுகளின் மத மற்றும் பண்பாட்டு மேலாண்மையை தூக்கிப் பிடிக்கும் பதாகை தாங்கியாக தெரசாவை முன்னாள் காலனிய சக்திகளும் மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகளும் முன்வைத்தன. மனிதர்களை குறித்து கவலைப்படாத, மனிதர்களை இழிவு செய்கிற இந்திய பண்பாட்டினால் அவலமடைந்தவர்களுக்கு மேற்கத்திய காருண்யத்தின் சரணாலயமாக தெரசா உலக ஊடகங்களில் காட்டப்பட்டார். தெரசா ஆற்றியது சேவை அல்ல; மேற்கத்திய பண்பாட்டு மத மேலாண்மையை மூன்றாம் உலகநாடுகள் ஏற்பதற்கான பிரச்சார முதலீடு.

ஆனால், மேற்கத்திய நாட்டிலிருந்து எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்திய பண்பாட்டின் மீதும் இந்திய மக்களின் முன்னேற்றத்தின் மீதும் முழு அக்கறையும் அன்பும் மதிப்பும் கொண்டு வாழ்நாள் முழுக்க தன்னைத்தானே தேய்த்து அழித்து சமர்ப்பித்த ஒருவர் உண்டு. அவரது சமாதி தினத்தின் நூற்றாண்டு விழா இவ்வருடம். அவர்தான் மார்கெரட் எலிஸபெத் நோபிள் என்கிற சகோதரி நிவேதிதை. பாரதத்துக்கு சமர்ப்பணமாக மேற்கு அளித்த சகோதரி அவர். உண்மையாக சமுதாயத்துக்கு தொண்டு செய்த அவரை, வழக்கம் போலவே போலி பகட்டுகளை மட்டுமே மதிக்கும் சமுதாயமாக மாறிவிட்ட நாம், மறந்துவிட்டோம்.

சகோதரி நிவேதிதை
 இந்நிலையில்தான் இரு நூல்கள் அவரது சமாதியின் நூற்றாண்டு விழாவின் போது வெளியிடப்பட்டுள்ளன.

யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா திருநெல்வேலி ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி முதல்வராக இருபது ஆண்டுகள் சேவை செய்தவர். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அவரது ஆராய்ச்சிசகோதரி நிவேதிதையின் எழுத்துக்களில் பாரத தரிசனமும் பாரத விரோத போக்கின் மீது எதிர் தாக்குதலும்என்பதாகும். அவருக்கு தீட்சை அளித்த சுவாமி சித்பவானந்தர் அவருக்கு அளித்த கட்டளைசகோதரி நிவேதிதையின் பெருமையை உலகறியச் செய்என்பதாகும். அவ்விதத்தில் வெளியாகி உள்ளவை இந்த இரு நூல்களும்.

‘வினா விடைகளில் ஒரு வியத்தகு வாழ்வுஇந்நூல் கேள்வி பதில்களாக சகோதரி நிவேதிதையின் வாழ்க்கையை விவரிக்கிறது. உதாரணமாக பிளேக் நோய் கல்கத்தாவை பீடித்து வாட்டிய காலகட்டத்தில் சகோதரி நிவேதிதையின் சேவையை இந்நூல் இப்படி விளக்குகிறது:

கேள்வி 129: சகோதரி நிவேதிதை பிளேக் நோய் நிவாரணப் பணியில் என்னென்ன செய்தார்?

நிவாரணக்குழு உறுப்பினர்களான ராமகிருஷ்ண மடத்துத் துறவியருடன் சேர்ந்து நிவாரணப் பணி எப்படி அமைய வேண்டும் என்று திட்டமிட்டார். அதைச் செயல்படுத்துவதில் குழு உறுப்பினர்களுக்கு உறுதுணையாக இருந்தார். நிவாரணப் பணிக்காக அரசு அதிகாரிகளை சந்தித்தார். திட்டமிடுதல் மட்டுமின்றி களத்திலும் இறங்கிப் பணி செய்து கொண்டிருந்தார். தொண்டர்களோடு இணைந்து தானும் வேலைகள் அனைத்தையும் செய்தார். அதிகாலையிலிருந்து நள்ளிரவு வரை ஓய்வின்றி அவர் உழைத்தார். பிளேக் நோயாளிகளை தானே நேரடியாக கவனித்து சிகிச்சை செய்தார். நிவாரணப் பணிக்கு தேவையான நிதி திரட்டினார். அதன் பொருட்டு வேண்டுகோள்கள் எழுதி பத்திரிகைகளில் வெளியிட்டார். மாணவர்களையும் பொதுமக்களையும் சந்தித்தார். பிளேக் நோய் நிவாரணம் குறித்தும் சுகாதரம் குறித்தும் மக்களுக்கு எடுத்துரைத்தார். ஒரு பகுதியில் தெருவை சுத்தம் செய்ய எவரும் வராத போது தாமே துடப்பத்தை எடுத்துக் கொண்டு சென்று சுத்தம் செய்யலானார். அவர் படைத்திருந்த ஆற்றல்களையெல்லாம் பொது நலத்திற்கு பயன்படுத்துவதற்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. மரணத்தோடு போர் புரிவது போலிருந்தது அவர் சலிக்காமல் செய்த சேவை. (பக்.22)

வெறும் காய்கறிகளையும் பாலையும் மட்டும் உண்டு வாழ்ந்தபடி பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேவையாற்றி வந்த சகோதரி ஒரு கட்டத்தில் அந்த பாலையும் மக்களுக்காக தியாகம் செய்தார். அந்த ஆச்சார வாதம் நிறைந்த எதிர்ப்பு சூழலில் பெண் குழந்தைகளுக்கு என கல்விச் சாலை தொடங்கினார். தாய்வழிக் கல்வி புகட்டினார்.

இக்கட்டத்தில் விவேகானந்தரிடம் ஆலோசனை கேட்கிறார் நிவேதிதை. அப்போது விவேகானந்தர் அளித்த அறிவுரை தனி கேள்வி-பதிலாக முன்வைக்கப்படுகிறது: “அதை (ஆலோசனையை) நீ பள்ளிக் குழந்தைகளிடமிருந்தே கற்றுக் கொள்வாய்என்றார் சுவாமி விவேகானந்தர். (பக்.23)

பன்முக மேதமை கொண்டவராக இருந்த நிவேதிதை அறிவியலில் இந்தியர்களின் பங்களிப்பு இனிவரும் நாட்களில் பண்பாட்டு மேன்மையையும் விடுதலையையும் வலியுறுத்தவும் சமூக மேம்பாட்டுக்கும் முக்கியமானது என அறிந்து கொண்டார். எனவே ஜகதீஷ் சந்திர போஸுக்கு அவர் மிகவும் உதவி செய்தார். அதே காலகட்டத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் அவருக்கு செய்த பல இடைஞ்சல்களை சகோதரி எதிர்த்து போராடினார். கொடி பிடிக்கவில்லை. கோஷங்கள் போடவில்லை. அமைதியாக மாற்று வழிகளில் உலக அறிவியலாளர்களையும் இதர இந்திய நேசிப்பாளர்களையும் தொடர்பு கொண்டு அவர் அறிவியல் கண்டுபிடிப்புகள் உலக பிரசித்தி அடைய உதவி செய்தார். (பக்.25) அன்று 1901 ஆம் ஆண்டு சகோதரி நிவேதிதையின் வாழ்க்கையில் முக்கியமானது. ஏன்? அந்த ஆண்டில்தான் சகோதரி நிவேதிதை பாரதம் விடுதலை பெற்றால் ஒழிய முழுமையான மேம்பாடு பாரதத்துக்கு கிடைக்காது என முடிவுக்கு வந்தார். (பக்.31)

237 கேள்வி பதில்கள் மூலம் சகோதரி நிவேதிதையின் வாழ்க்கையை இந்த நூல் விளக்குகிறது.
முக்கியமான சில புகைப்படங்கள் உள்ளன. மாணவ மாணவிகள் சகோதரியின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகள் அவரது முக்கியமான கருத்துக்கள் ஆகியவற்றை எளிதாக அறிந்து கொள்ளலாம்.

சகோதரி நிவேதிதையின் சமாதி தின நூற்றாண்டை ஒட்டி அதே ஆசிரியை எழுதியுள்ள மற்றொரு நூல் நிகரில்லா நிவேதிதை. வினாவிடை நூலில் கூறப்பட்டுள்ள விசயங்களின் விரிவான சித்திரத்தை இந்த நூலில் நாம் காண்கிறோம்.

நிகரில்லா நிவேதிதா நூல் ஆறு கட்டுரைகள் கொண்டு விளங்குகிறது. ஒவ்வொன்றும் சகோதரி நிவேதிதையின் ஒவ்வொரு பரிமாணத்தை ஆழமாக விளக்குகிறது. முதல் கட்டுரைஉன்னத குருவின் உத்தம சிஷ்யைஇக்கட்டுரை சுவாமி விவேகானந்தர் எவ்விதமாக சகோதரி நிவேதிதையை மெய்ஞான பயிற்சிகள் மூலம் பாரத தேச சேவைக்கு பக்குவப்படுத்தினார் என்பதை விளக்குகிறது. அதில் சுவாமிஜி கடுமையாக இருந்தார். உதாரணமாக, சகோதரி நிவேதிதைபொதுவாக உலக மக்கள் சுயநலம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் ஆங்கிலேயர் அவ்வாறல்லஎன கூறினார். ‘பொதுவாக உலக மக்கள் குணத்திலிருந்து ஒரு இனத்தை மட்டும் மேம்படுத்தி சொல்லும் தேசபக்தி பாவமே தவிர வேறெதுவுமில்லைஎன கடுமையாக கூறினார் சுவாமி விவேகானந்தர். (பக்.20)

அடுத்த கட்டுரை சகோதரி நிவேதிதையும் பாரத பண்பாடும். பாரத பண்பாட்டின் ஒவ்வொரு கூறுக்கும் சகோதரி நிவேதிதை அளித்த கூர்மையான பார்வையை கண்டு வியக்காமல் இருக்க இயலவில்லை. குடும்ப அமைப்பாகட்டும், தினசரி நடைமுறை வாழ்க்கையாகட்டும், ஹிந்துக்களின் சமயச் சடங்குகள். கோவில் திருவிழாக்கள், தேசிய இதிகாசங்கள் என தொடங்கி வேப்பமர வழிபாடு வரை அனைத்தையும் சகோதரி நிவேதிதை ஆழமாக கவனித்து விரிவாக பதிவு செய்துள்ளது மட்டுமல்ல ஒரு அன்னியராக வெளியிலிருந்து மதிப்பிடாமல் ஒரு ஹிந்துவாக உள்ளே வாழ்ந்து உணர்ந்த தன்மையை இக்கட்டுரை நமக்கு அளிக்கிறது. இது வெறும் பண்பாட்டு மேன்மை மட்டும் சார்ந்த விசயமல்ல. ஒரு ஹிந்து சமூகவியல்உள்ளார்ந்த பார்வை நமக்கு இன்று தேவைப்படுகிறது. அதற்கான தொடக்கப்புள்ளியை சகோதரி நிவேதிதை அளித்துள்ளார். அதை நாம் பயன்படுத்தி வளர்த்தெடுத்தோமா என்கிற சங்கடமான கேள்வியையும் அது நம்முள் எழுப்புகிறது.

அடுத்தது சகோதரி நிவேதிதையும் சேவையும். எப்படி தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்ந்த பகுதிகளில் உள்ள சாக்கடைகளை பிளேக் காலங்களில் நிவேதிதாவும் அவருடன் பணியாற்றிய இளைஞர்களும் களமிறங்கி சுத்தப்படுத்தினார்கள், குடிசை குடிசையாக சென்று பணியாற்றினர், எப்படி நிவேதிதா தானே களமிறங்கி பணியாற்றியதன் மூலம் முன்னுதாரணமாக விளங்கினார் என்பதையெல்லாம் இப்பகுதி தெளிவாக விளக்குகிறது. (நிகரில்லா நிவேதிதா பக். 71-2) அத்துடன் இது ஏதோ ஒரு ஆதாய அறுவடைக்காக செய்யப்படும் முதலீடு அல்ல மாறாக சேவைக்காகவே செய்யப்படும் சேவை. சேவையே வழிபாடாக அதுவே இலட்சியமாக நடத்தப்படும் சேவை. இச்சேவையின் தத்துவார்த்த உள்ளீடு ஸ்ரீ ராமகிருஷ்ணவிவேகானந்த சேவை தத்துவம் ஆகியவையும் விளக்கப்படுகின்றன.

சகோதரி நிவேதிதை அடிப்படையில் ஒரு கல்வியாளர். குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பதில் ஆர்வம் கொண்டவர். அடித்தட்டு மக்களுக்கு கல்வி அளிப்பதே உண்மையான விடுதலையின் முதல் படியும் முக்கிய படியும் ஆகும் என்பதை உணர்ந்தவர். இங்கிலாந்தில் கல்வியாளராகவே அவர் தம் வாழ்க்கையைத் தொடங்கினார். வசதியான கல்விசாலை ஒன்றில் கிடைத்த வேலையை துறந்து நிலக்கரி தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி சேவை புரிய சென்றவர் அவர். அறிவியல் பூர்வமாகவும் நடைமுறைப்பூர்வமாகவும் கல்வி அமையவேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருந்தார்.

குழந்தை எந்த பிராணியைப் பார்த்தும் அருவருப்பு அடைவதோ அச்சம் கொள்வதோ கூடாது. அதன் பொருட்டு இந்த ஆரம்பக் காலகட்டத்திலிருந்தே சிலந்தி, கொசு, தட்டான், வண்ணத்துப்பூச்சி நத்தை புழுக்கள் மரவட்டை ஆகிய ஜந்துக்களை குழந்தை தெரிந்து கொள்ளும்படி செய்ய வேண்டும். உயிரினங்களைப் பார்த்து அவை நமக்கு தோழர்கள் என்ற உணர்வு குழந்தைக்கு ஏற்பட வேண்டும் என்கிறார் நிவேதிதா. (பக்.93)

100 ஆண்டுகளுக்கு முன்னர் நிவேதிதா கூறிய இந்த கல்வியியல் கோட்பாடு இன்னும் நம் உயிரியல் கல்வியில் எட்டப்படாமலே உள்ளது என்பது எத்தனை வேதனையான விசயம்? அதே நேரத்தில் உயிரியலையும் சூழலியலையும் முழுமையாக கற்க இதுவே மிகவும் முதன்மையான வழிமுறை என்பதை இன்று சர்வதேச அளவில் உயிரியல் கல்வியாளர்கள் கூறி வருகிறார்கள். மாணவர்கள் கேள்வி கேட்பதை ஊக்குவிக்கும் கல்விமுறையை சகோதரி வலியுறுத்தினார். குழந்தையின் ஒரு கேள்விக்கு திருப்திகரமான பதிலை அளிக்க ஐம்பது கேள்விகளுக்கு ஆசிரியருக்கு பதில் தெரிந்திருக்க வேண்டும் என்கிறார் அவர். ‘சகோதரி நிவேதிதையின் கல்விக்கொள்கைகள் என ஒரு கட்டுரையும் சகோதரி நிவேதிதை ஆற்றிய கல்விப்பணி என ஒரு கட்டுரையும் உள்ளன. இவை கல்வியில் அதன் தரத்தில் அதன் முக்கியத்துவத்தில் சகோதரி நிவேதிதை காட்டிய ஈடுபாட்டை விளக்குகின்றன. அத்துடன் பெண் கல்விக்காக எத்தனையோ சவால்களையும் எதிர்ப்புகளையும் மீறி சகோதரி நிவேதிதை உழைத்தார் என்பதையும் இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இறுதி கட்டுரை சகோதரி நிவேதிதையின் தேசியம் குறித்ததாகும். பாரதத்தின் தேசிய கொடியை முதலில் உருவாக்கியவர் சகோதரியே. ததீசி முனிவரின் முதுகெலும்பால் உருவான வஜ்ஜிரம் வலிமை மற்றும் தன்னிகரற்ற தியாகத்தின் பண்பாட்டு-தொன்ம சின்னமாகும். அதையே இந்த தேசத்தின் சின்னமாக அவர் பொறித்திருந்தார். மகாபாரதத்தில் தாய் காந்தாரி கூறும் வார்த்தைகளானஎங்கு அறமோ அங்கே வெற்றி’ (யதோ தர்மஸ் ததோ ஜய:) எனும் வார்த்தைகள் தேச இலச்சினை வாக்கியமாக சகோதரி கருதினார். தேசியம் என்பதை குறுகிய இனவாதமாக சகோதரி முன்வைக்கவில்லை.

  •         மகோன்னதமான தொன்மை வாய்ந்த பாரத பண்பாடு
  •       அதன் பன்மையில் ஒருமை காணும் திருஷ்டி
  •      உலககுருவாக விளங்கும் திறம் கொண்டிருப்பினும் உலக அரங்கில் இன்று பாரதம் அடைந்துள்ள வீழ்ச்சி
  •     அதிலிருந்து எப்படி மீண்டெழுவது
இந்த அனைத்துத் தன்மைகளையும் கணக்கில் கொண்டு அறிவார்ந்த தேசிய கருத்தாக்கங்களை அவர் முன்வைத்தார்.
           
உதாரணமாக காந்தார கலை என்பது மேற்கத்திய தாக்கத்தால் ஏற்பட்டது; அது மட்டுமல்ல இந்திய கலை வளர்ச்சியே மேற்கத்திய கலை தாக்கத்தால் ஏற்பட்ட ஒன்றுதான் என ஒரு மேற்கத்தியமேதாவிகூறினார். அதை மறுத்து, காந்தார கலையில் உள்ள மேற்கத்திய தாக்கமே அதன் பலவீனம் என்றும், காந்தார கலைக்கு முந்தைய மகத கலையின் இயல்பான சுதேசிய வளர்ச்சியை அஜந்தா குகைகளில் காண முடிகிறது என்பதையும், அது அந்த காலகட்டத்தின் மேற்கத்திய கலை வளர்ச்சியைக் காட்டிலும் மேன்மையானதாக இருப்பதையும் அசைக்கமுடியாத ஆதாரங்களுடன் நிவேதிதை முன்வைத்தார்.
           
இந்த இரு நூல்களும் சகோதரி நிவேதிதையின் சமாதி நூற்றாண்டுக்கு தமிழ் இந்துக்கள் அவர் நினைவுக்கு அளித்துள்ள அர்ப்பணமாகும். தமிழ்நாட்டில் பெண் விடுதலையை பரப்பிய பொது உணர்வில் பெரிய அளவில் கொண்டு சென்றவர் பாரதி. அதற்கு பாரதிக்கு குருவாக அமைந்தவர் நிவேதிதை. எனவே அந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் துறவி ஒருவர் இந்த இருநூல்களையும் எழுதியிருப்பது சரியான நன்றிக்கடனே. தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திடமும் இந்த இருநூல்களையும் கொண்டு சேர்ப்பது நம் ஒவ்வொருவருக்கும் இருக்கும் வரலாற்றுக் கடமையாகும்.

நிகரில்லா நிவேதிதா
(
விலை ரூ 45/-)
வினா-விடையில் ஒரு வியத்தகு வாழ்வு
(
விலை ரூ 40/-)
ஆசிரியை: பூஜனீய யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா 

நூல் வெளியிடுவோர்:
ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவிகா சமிதிலஷ்மி கிருபா,  
.ஜி.1/1 ஸ்டிரிங்கர்ஸ் அபார்ட்மெண்ட்ஸ் 
ஸ்ட்ரிங்கர்ஸ் சாலை,  
வேப்பேரி,  
சென்னை-3.  
தொலைபேசி: 9444915973


நூல் கிடைக்கும் இடம்:
ஸ்ரீ சாரதா ஆஸ்ரமம்,
34, H I G வடக்கு பிரதான சாலை,
தாமரை நகர்,
திருவண்ணாமலை – 606 001. 

[அரவிந்தன் நீலகண்டன் அவர்களால் எழுதப்பட்டு www.tamilhindu.com இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட கட்டுரை சகோதரி நிவேதிதாவின் நினைவு தினமான இன்று(13.10.2012, சனிக்கிழமை) உங்கள் பார்வைக்கு....]